Thiruppugazh - Arunagirinathar - Prayer Songs in Tamil for Health

 உடல் ஆரோக்கியம் பேண உதவும் திருப்புகழ் பாடல்கள்




நம்முடைய மனத்தில் நின்று அதனை வழிநடத்தும் ஈசுவரனே விநாயகர். இறைவனை எந்த ரூபத்தில் வழிபட்டாலும், விநாயகருடைய கருணையினாலேயே நம்முடைய புத்தி தெளிவடைந்து மனம் ஆரோக்கியத்துடன் விளங்குகிறது.

நம்முடைய உடலில் நின்று அதனை வழிநடத்தும் ஈசுவரனே முருகன். இறைவனை எந்த ரூபத்தில் வழிபட்டாலும், முருகனுடைய கருணையினாலேயே நம்முடைய புலன்கள் கூர்மையடைந்து தேஹம் ஆரோக்கியத்துடன் விளங்குகிறது.

 
ஆகவே, நம் மனத்தையும் உடலையும் ஆரோக்கியத்துடன் பேணுவதற்கு இவர்களை வணங்குவதை விட சிறந்த வழி வேறு என்ன இருக்கமுடியும்? அப்படி வணங்குவதற்கு அருணகிரிநாதரின் திருப்புகழை விடச் சிறந்த வேறு பக்திநூல் என்ன இருக்க முடியும்?

தன் உடம்பின் ஆரோக்கியக் குறைவினால் மனம் நொந்து தன் உயிரை மாய்த்துக்கொள்ளத் துணிந்து, பின், முருகப் பெருமானால் தடுத்தாட்கொள்ளப்பட்டு, திருப்புகழைப் பாடிப் பாடியே முழு ஆரோக்கியம் பெற்றவர் அல்லவா, அருணகிரிநாதர்?

சந்தநயத்தோடு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழிலிருந்து, கௌமாரம் குழுவினரால் மிக அழகாகப் பாடப்பட்ட, மூன்று முக்கியமான பாசுரங்கள் இங்கு தரப்பட்டுள்ளன.
 
ஜாதகத்தில் வியாதி ஸ்தானமாகக் கருதப்படும் ஆறாம் இடம் வலுவிழந்து நின்று, தொடர்புடைய தசாபுக்தி நடைபெறுவதால், உண்டான நோய்களின் தீவிரத்தைத் தணிப்பதற்கு, அன்பர்கள் இப்பாசுரங்களைத் தினந்தோறும் பாராயணம் செய்துவரவும்.







திருப்புகழ் - விநாயகர்


கைத்தல  நிறைகனி  அப்பமோடு  அவல்பொரி
                        கப்பிய  கரிமுகன்  அடிபேணிக்
            கற்றிடும்  அடியவர்  புத்தியில்  உறைபவ
                        கற்பகம்  எனவினை  கடிதேகும்

மத்தமும்  மதியமும்  வைத்திடும்  அரன்மகன்
                        மற்பொரு  திரள்புய  மதயானை
            மத்தள  வயிறனை  உத்தமி  புதல்வனை
                        மட்டவிழ்  மலர்கொடு  பணிவோமே

முத்தமிழ்  அடைவினை  முற்படு  கிரிதனில்
                        முற்பட  எழுதிய  முதல்வோனே
            முப்புரம்  எரிசெய்த  அச்சிவன்  உறைரதம்
                        அச்சது  பொடிசெய்த  அதிதீரா

அத்துய  ரதுகொடு  சுப்பிர  மணிபடும்
                        அப்புனம்  அதனிடை  இபமாகி
            அக்குற  மகளுடன்  அச்சிறு  முருகனை
                        அக்கணம்  மணமருள்  பெருமானே.






திருப்புகழ் - திருத்தணி முருகன்


இருமலு  ரோக  முயலகன்  வாதம்
                        எரிகுண  நாசி  விடமேநீ
            ரிழிவுவி  டாத  தலைவலி  சோகை
                        எழுகள  மாலை  இவையோடே

பெருவயி  றீளை  எரிகுலை  சூலை
                        பெருவலி  வேறு  முளநோய்கள்
            பிறவிகள்  தோறும்  எனைநலி  யாத
                        படியுன  தாள்கள்  அருள்வாயே

வருமொரு  கோடி  அசுரர்ப  தாதி
                        மடியஅ  நேக  இசைபாடி
            வருமொரு  கால  வயிரவ  ராட
                        வடிசுடர்  வேலை  விடுவோனே

தருநிழல்  மீதில்  உறைமுகி  லூர்தி
                        தருதிரு  மாதின்  மணவாளா
            சலமிடை  பூவின்  நடுவினில்  வீறு
                        திருத்தணிமலை  மேவு  பெருமாளே.





திருப்புகழ் - சுவாமிமலை முருகன்


பாதி  மதிநதி  போதும்  அணிசடை
                        நாதன்  அருளிய  குமரேசா
            பாகு  கனிமொழி  மாது  குறமகள்
                        பாதம்  வருடிய  மணவாளா

காதும்  ஒருவிழி  காக  முறஅருள்
                        மாயன்  அரிதிரு  மருகோனே
            காலன்  எனையணு  காமல்  உனதிரு
                        காலில்  வழிபட  அருள்வாயே

ஆதி  அயனொடு  தேவர்  சுரர்உல
                         காளும்  வகையுறு  சிறைமீள
            ஆடும்  மயிலினில்  ஏறி  அமரர்கள்
                        சூழ  வரவரும்  இளையோனே

சூத  மிகவளர்  சோலை  மருவுசு
                        வாமி  மலைதனில்  உறைவோனே
            சூரன்  உடலற  வாரி  சுவறிட
                        வேலை  விடவல  பெருமாளே.


......... முதல் பாசுரம் - சொல் விளக்கம் .........

கைத்தலம் நிறைகனி அப்ப மொடு அவல் பொரி கப்பிய கரிமுகன் அடிபேணி ... கரதலத்தில் நிறைந்துள்ள பழம், அப்பம், அவல், பொரி (இவைகளை) வாரி உண்ணும் யானை முகக் கடவுளின் திருவடிகளை விரும்பி,

கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ கற்பகம் எனவினை கடிதேகும் ... அறிவு நூல்களைக் கற்கும் அடியவர்களுடைய மனதில் நீங்காது வாழ்பவனே, நினைத்தவற்றை அளிக்கும் கற்பக விருட்சமே, என்று உன்னைத் துதி செய்தால் வினைகள் யாவும் விரைவில் ஓடிப் போய்விடும்.

மத்தமும் மதியமும் வைத்திடும் அரன்மகன் மற்பொரு திரள்புய மதயானை ... ஊமத்த மலரும், (பிறைச்) சந்திரனும் சடையில் தரித்த சிவபெருமானுடைய மகனும், மற்போருக்குத் தக்க திரண்ட தோள்களையுடையவனும், மத யானையை ஒத்தவனும்,

மத்தள வயிறனை உத்தமி புதல்வனை மட்டு அவிழ் மலர்கொ (ண்) டு பணிவேனே ... மத்தளம் போன்ற பெருவயிறு உடையவனும், உத்தமியாகிய பார்வதியின் மகனும் ஆகிய கணபதியைத் தேன் துளிர்க்கும் புது மலர்களைக் கொண்டு நான் வணங்குவேன்.

முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில் முற்பட எழுதிய முதல்வோனே ... இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழ் நூல் முறைமையை, மலைகளுள் முற்பட்டதான மேரு மலையில் முதல் முதலில் எழுதிய முதன்மையானவனே,

முப்புரம் எரி செய்த அச்சிவன் உறை ரதம் அச்சு அது பொடிசெய்த அதிதீரா ... (அசுரர்களின்) திரி புரங்களையும் எரித்த அந்தச் சிவ பெருமான் எழுந்தருளிய ரதத்தின் சக்கர அச்சை ஒடித்துத் தூளாக்கிய மிகுந்த தீரனே,

அத்துயர் அது கொ (ண்) டு சுப்பிரமணி படும் அப்புனம் அதனிடை இபமாகி ... (வள்ளி மீது கொண்ட காதலாகிய) அந்தத் துயரத்தோடு (உன் தம்பியாகிய) சுப்பிரமணியன் நடந்த அந்தத் தினைப் புனத்திடையில் யானையாகத் தோன்றி,

அக்குற மகளுடன் அச்சிறு முருகனை அக்கணம் மணம் அருள் பெருமாளே. ... அந்தக் குற மகளாகிய வள்ளியுடன் அந்தச் சிறிய முருக வேளை அத்தருணத்திலேயே மணம் புரியுமாறு திருவருள் பாலித்த பெருமாளே.



......... இரண்டாம் பாசுரம் - சொல் விளக்கம் .........

இருமலு ரோக முயலகன் வாதம் ... இருமல் என்ற நோய், முயலகன் என்ற வலிப்பு நோய், வாத நோய்,

எரிகுண நாசி விடமே நீரிழிவு ... எரியும் குணமுள்ள மூக்கு நோய், விஷ நோய்கள், நீரிழிவு நோய்,

விடாத தலைவலி சோகை ... நீங்காத தலைவலி, ரத்த சோகை,

எழுகள மாலை யிவையோடே ... கழுத்தைச் சுற்றி உண்டாகும் மாலை போன்ற புண் இவற்றுடன்,

பெருவயி றீளை யெரிகுலை சூலை ... மகோதர நோய், நுரையீரலில் கோழை நோய், நெஞ்சு எரியும் நோய், தீராத வயிற்று வலி,

பெருவலி வேறுமுளநோய்கள் ... ஆகிய பெரு வலியுடன் கூடிய பிற நோய்கள்

பிறவிகள் தோறு மெனைநலி யாதபடி ... ஒவ்வொரு பிறவியிலும் என்னைப் பீடிக்காதபடி,

உன தாள்கள் அருள்வாயே ... உன்னுடைய திருவடிகளைத் தந்தருள்வாயாக.

வருமொரு கோடி யசுரர்பதாதி ... உன்னை எதிர்த்துவந்த கோடிக்கணக்கான அசுரர்களின் காலாட்படை

மடியஅ நேக இசைபாடி வருமொரு கால வயிரவ ராட ... இறந்துபடவும், அனேக வீரப் பாட்டுக்களைப் பாடிக்கொண்டு வந்த ஓர் காலபைரவர் (சிவ பெருமான்) போர்க்களத்தில் நடனமாடவும்,

வடிசுடர் வேலை விடுவோனே ... கூரிய ஒளிவீசும் வேலைச் செலுத்தியவனே,

தருநிழல் மீதிலுறைமுகிலூர்தி ... கற்பக விருட்சங்களின் நிழலில் வசிக்கும் மேக வாகனன் இந்திரன்

தருதிரு மாதின் மணவாளா ... வளர்த்த அழகிய பெண் தேவயானையின் மணவாளனே,

சலமிடை பூவின்நடுவினில் வீறு ... கடலால் சூழப்பட்ட இந்தப் புவியின் மத்தியில் சிறப்போடு விளங்கும்

தணிமலை மேவு பெருமாளே. ... திருத்தணிகை மலையில் வீற்றிருக்கும் பெருமாளே.


......... மூன்றாம் பாசுரம் - சொல் விளக்கம் .........
பாதி மதிநதி போதும் ... பிறைச் சந்திரனையும், கங்கை நதியையும், கொன்றை மலரையும்

அணிசடை நாத ரருளிய குமரேசா ... அணிந்த சடைப் பெருமான் சிவபிரான் அருளிய குமரேசனே,

பாகு கனிமொழி மாது ... சர்க்கரைப் பாகும், கனிகளும் போன்ற இனிய மொழியை உடைய மாதரசி,

குறமகள் ... குறமகளாகிய வள்ளியின்

பாதம் வருடிய மணவாளா ... பாதத்தைப் பிடித்துவிடும் மணவாளனே,

காது மொருவிழி காகமுற அருள் ... பிரிக்கப்பட்ட ஒரு விழியை காகாசுரன் என்னும் காகம் அடையும்படி அருளிய

மாயன் அரி திரு மருகோனே ... ஸ்ரீராமர் மாய ஹரிக்கும், லக்ஷ்மிக்கும் மருமகனே,

காலனெனை யணுகாமல் ... யமன் என்னை அணுகாத வகைக்கு

உனதிரு காலில் வழிபட அருள்வாயே ... உன் இரு திருவடிகளில் வழிபடும் புத்தியை அருள்வாயாக.

ஆதி யயனொடு தேவர் ... ஆதி பிரமனோடு அமரர்கள் அனைவரும்

சுரருலகு ஆளும் வகையுறு சிறைமீளா ... தேவலோகத்தை ஆளும்படி சிறையினின்று அவர்களை மீட்டவனே,

ஆடு மயிலினி லேறி ... நடனம் ஆடும் மயில் மீது ஏறி

அமரர்கள் சூழ வர ... தேவர்கள் உன்னைச் சூழ்ந்துவர

வரும் இளையோனே ... வருகின்ற இளையவனே,

சூத மிகவளர் சோலை ... மாமரங்கள் மிகுந்து வளர்ந்த சோலைகள்

மருவு சுவாமிமலைதனில் உறைவோனே ... நிறைந்த சுவாமிமலையில் வீற்றிருப்பவனே,

சூர னுடலற ... சூரனின் உடல் வீழ,

வாரி சுவறிட ... கடல் வற்றிப்போக,

வேலை விடவல பெருமாளே. ... வேலினைச் செலுத்தவல்ல பெருமாளே.

Credit: kaumaram.com

Comments