Kolaru Pathigam
கோளறு பதிகம்
அறிமுகம்
நாம் இப்பிறவியில் அனுபவிக்கும் வாழ்க்கை அனுபவத்திற்குக் காரணமான நம்முடைய வினைகள் பிராரப்த கர்மம் என அழைக்கப்படுகிறது. இந்த வினைகள், நாம் முற்பிறவிகளில் செய்து மொத்தமாகச் சேர்த்திருக்கும் வினைகளிலிருந்து (சஞ்சித கர்மம்) எடுக்கப்பட்ட ஒரு சிறு பகுதியாகும்.
நம் வாழ்க்கையின் குறிப்பிட்ட ஓர் அனுபவத்தை மாற்ற வேண்டுமென்று நாம் விரும்பினால், அந்த அனுபவத்திற்குக் காரணமான பிராரப்த கர்மப்பகுதியை மாற்ற வேண்டும். பிராரப்த கர்மப்பகுதியை மாற்றவேண்டுமானால் அதற்குத் தொடர்புடைய சஞ்சித கர்மப்பகுதியை மாற்றவேண்டும்.
எந்தக் கர்மப் பகுதியை எப்படி மாற்ற வேண்டும் என்ற அறிவோ சக்தியோ நமக்குக் கிடையாது. ஆனால், முற்றறிவும் முழுசக்தியும் கொண்ட ஈசுவரனை, ஈசுவரியை முன்னிட்டுக்கொண்டு நாம் சரணடைந்தால், மிகவும் சிக்கலான இந்த வேலையைக் கருணை மஹா ஸமுத்திரமான சிவபெருமான் நமக்கு செய்தருள்வார்.
உமாதேவியின் பூரண கருணையுடன் சிவப்பரஞ்சுடரின் செல்லக் குழந்தையாக தமிழ் மண்ணில் உலவியருளிய சம்பந்தர், இதற்கெனவே பிரத்யேகமாகப் பாடியருளிய பிரார்த்தனைப் பதிகமே இந்தக் கோளறு பதிகம். இதனை நாம் பாராயணம் செய்யும்போது, திருஞான சம்பந்தரை முன்னிட்டுக்கொண்டு, அம்மையப்பரான உமாபதியின் திருவடிகளில் மிக எளிதாக சரணமடையும் படி, ஆளுடைய பிள்ளையான சம்பந்தர் அவ்வளவு அழகாகப் பாடியுள்ளார்.
கடந்தகாலத்தில் நடந்த நிகழ்வுகள் தொடர்பாக நமக்கு உள்ள ஆறாத வருத்தமும், எதிர்காலத்தில் நடக்க வாய்ப்புள்ளதாக நாம் கருதும் நிகழ்வுகள் தொடர்பாக நமக்குள்ள மிதமிஞ்சிய பதற்றமும், இவ்விரண்டுக்கும் காரணமாக நாம் நினைக்கும் மனிதர்கள் மீது நமக்குள்ள ஆழ்ந்த வெறுப்பும் ஆகிய இம்மூன்று கூறுகளைக் கொண்ட எதிர்மறை ஆற்றலானது, நம் உடல் மனம் நெஞ்சத்தில் நிரம்பி வழியும் வரையில், நாம் விரும்பும் வாழ்வு அமைய வாய்ப்பில்லை.
கோளறு பதிக தினசரி பாராயணத்தால், மேற்சொன்ன எதிர்மறை ஆற்றல் சிவப்பரஞ்சுடரால் அழிக்கப் பெற்று, நாம் விரும்பும் வாழ்வு அமைகிறது என்பதுதான் இந்தப் பதிகத்தின் ஆன்மீகப் பின்புலம்.
பதிகத்தின் திரண்ட கருத்து
1. முதல் பாசுரம் – கோள்கள் அடியார்களுக்கு நலமே செய்யட்டும்
வேயுறு தோளிபங்கன் விடம்உண்ட கண்டன்மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய்புதன் வியாழன்வெள்ளி
சனிபாம் பிரண்டும் உடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே.
2. இரண்டாம் பாசுரம் – நாள்கள் அடியார்களுக்கு நலமே செய்யட்டும்
என்பொடு கொம்பொ டாமைஇவை மார்பிலங்கஎருதேறி ஏழை உடனே
பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஒன்பதொ டொன்றொடேழு பதினெட்டொ டாறும்
உடனாய நாள்கள் அவைதாம்
அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே.
3. மூன்றாம் பாசுரம் – தெய்வங்கள் அடியார்களுக்கு நலமே செய்யட்டும்
உருவளர் பவளமேனி ஒளிநீ றணிந்துஉமையோடும் வெள்ளை விடைமேல்
முருகலர் கொன்றைதிங்கள் முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
திருமகள் கலைய தூர்தி செயமாது பூமிதிசை
தெய்வ மான பலவும்
அறநெறி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே.
4. நான்காம் பாசுரம் – உயிர்க்கொல்லி நோய்கள் அடியார்களுக்கு நலமே செய்யட்டும்
மதிநுதல் மங்கையோடு வடபால் இருந்துமறைஓது மெங்கள் பரமன்
நதியொடு கொன்றைமாலை முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
கொதிஉறு காலனங்கி நமனொடு தூதர்
கொடுநோய்க ளான பலவும்
அதிகுணம் நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே.
5. ஐந்தாம் பாசுரம் – பூதங்கள் அடியார்களுக்கு நலமே செய்யட்டும்
நஞ்சணி கண்ட னெந்தை மடவாள் தனோடுவிடைஏறு நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடும் உரும்இடியும் மின்னும்
மிகையான பூதம் அவையும்
அஞ்சிடும் நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே.
6. ஆறாம் பாசுரம் – விலங்குகள் அடியார்களுக்கு நலமே செய்யட்டும்
வாள்வரி அதளதாடை வரிகோ வணத்தர்
மடவாள் தனோடும் உடனாய்
நாண்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
கோளரி உழுவையோடு கொலையானை கேழல்
கொடுநா கமோடு கரடி
ஆளரி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே.
7. ஏழாம் பாசுரம் – துன்பம் தரும் நோய்கள் அடியார்களுக்கு நலமே செய்யட்டும்
செப்பிள முலைநன் மங்கை ஒருபாகமாகவிடையேறு செல்வன் அடைவான்
ஒப்பிள மதியுமப்பும் முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும்வாதம் மிகையான பித்தும்
வினையான வந்து நலியா
அப்படி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே.
8. எட்டாம் பாசுரம் – தீப்புலன்கள் அடியார்களுக்கு நலமே செய்யட்டும்
வேள்பட விழிசெய்தன்று விடைமே லிருந்துமடவாள் தனோடும் உடனாய்
வாள்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழிலங்கை அரையன் தனோடும்
இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே.
9. ஒன்பதாம் பாசுரம் – தேவர்கள் அடியார்களுக்கு நலமே செய்யட்டும்
பலபல வேடமாகும் பரன்நாரி பாகன்
பசுவேறு மெங்கள் பரமன்
சலமகளோடு எருக்கு முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
மலர்மிசை யோனும்மாலும் மறையோடு தேவர்
வருகால மான பலவும்
அலைகடல் மேருநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே.
10. பத்தாம் பாசுரம் – ஈசுவரன் திருநீறு அடியார்களுக்கு நலமே செய்யட்டும்
கொத்தலர் குழலியோடு விசையற்கு நல்குகுணமாய வேட விகி்ர்தன்
மத்தமும் மதியும்நாகம் முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
புத்தரொ டமணைவாதில் அழிவிக்கும் அண்ணல்
திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே.
பலன் சொல்லும் பாசுரம் – அடியார்கள் இம்மையில் கோளும் நாளும் பிறவும் நலியாதே, மறுமையில் திருக்கைலாயப் பேறு பெறுவர்
தேனமர் பொழில்கொள் ஆலைவிளை செந்நெல்துன்னிவளர் செம்பொன்எங்கும் திகழ
நான்முகன் ஆதிஆய பிரமா புரத்து
மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளும்நாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரைசெய்
ஆனசொல் மாலைஓதும் அடியார்கள் வானில்
அரசாள்வர் ஆணை நமதே.
Comments
Post a Comment